கொஞ்சம் பெரியது தான் படித்து பாருங்கள்
மனுமுறைகண்ட வாசகம்.(படித்து பாருங்கள் விளக்கம் புரியும்)
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ !
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ !
வரவு போக்கு ஒழியவழி அடைத்தேனோ !
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !
தருமம் பாராது தண்டம் செய்தேனோ !
கலந்த சிநேகரைக் கலகம் செய்தேனோ !
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ !
மன ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ !
மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ !
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !
குடிக்கின்ற நீருள்ளக் குளத்தைத் தூர்த்தேனோ !
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ !
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ !
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ !
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ !
பொது மண்டபத்தை போயிடித்தேனோ !
ஆசை காட்டி போசஞ் செய்தேனோ !
அன்புடையவர்க்கு துன்பம் செய்தேனோ !
வேலையிட்டுக் கூலிகுறைத்தேனோ !
வெய்யிலுக் கொதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ !
பசித்தோர் முகத்தை பாரா திருந்தேனோ !
பகை கொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ !
கோள் சொல்லிக் குடும்பம் அலைத்தேனோ !
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ !
கற்பிழந்தவளைக் கலந் திருந்தேனோ !
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ !
கருப்பம் அழித்துக் களித் திருந்தேனோ !
கற்றவர் தம்மைக் கடு கடுத்தேனோ !
கன்றுக்குப் பாலுட்டாது கட்டி வைத்தேனோ !
குருவை வணங்கக் கூசி நின்றேனோ !
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ !
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ !
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
சிவனடியாரைச் சீறி வைதேனோ !
சுத்த ஞானிகளைத் தூஷணம் நடந்தேனோ !
தந்தைதாய் மொழியை தள்ளி நடந்தேனோ !
தெய்வத்தை இகழ்ந்து செருக்கைடைந்தேனோ !
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்று அறியேனே
ஒருவன் நான் மேலுள்ள எந்த பாவமும் செய்யாத போது எனக்கு ஏன் இந்த கஸ்டம் வந்தது
என்று மன உருக பாடும் பாடல்.
No comments:
Post a Comment